சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நான்காவது முறையாக வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக அங்கிருந்து வெள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு எட்டியதால் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாரு அருகே கடலில் கலக்கிறது.
இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்வதால், ஆற்றின் உள்ளே அமைந்துள்ள முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைதிட்டு, உள்ளிட்ட கிராமங்கள் செல்லும் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதையும் படிக்க: தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா
இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு அப்பகுதி மக்கள் தண்ணீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் தண்ணீரை கடந்து சென்று வருகின்றனர்.