கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு மதகு கழன்று விழந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுபணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர் கட்டிய அணைகளில் மிகவும் பிரபலமான அணைகளில் பரம்பிக்குளம் அணையும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணையில் இருந்து உபரிநீர் சேடல் அணை, தூணகடவு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரும்.
71 கனஅடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றும் போது சாலக்குடிநீர் வழியாக கடலில் கலக்கிறது.
நேற்றிரவு 10 மணியளவில் அணையில் உள்ள மூன்று மதகுகளில் நடுவில் இருந்த ஒரு மதகு கழன்று விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரள பொதுபணித் துறை அதிகாரிகள், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி உள்ளிட்டோர் அணையில் இருந்து வெளியேறும் நீரைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் அணையில் இருந்து வெளியேறும் நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.