வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு: டிஜிபி சைலேந்திர பாபு

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பிரச்னைகள் வராமல் தடுப்பதற்காக 60 ஆயிரம் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்: சி.சைலேந்திர பாபு
வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு: டிஜிபி சைலேந்திர பாபு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22)  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு தெரிவித்தார்.

 இது குறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல்துறை பகுதியில் 10 மையங்கள், ஆவடி மாநகர காவல்துறை பகுதியில் 4 மையங்கள், தாம்பரம் காவல்துறை பகுதியில் 5 மையங்கள் என தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சென்னை பகுதியை தவிர்த்து மீதியுள்ள 37 மாவட்டங்களில் 259 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.   வாக்கு எண்ணும் மையங்களில், தமிழகத்தில் ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், உள்ளூர் போலீஸார் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி, முக்கியமான இடங்களிலும், சந்திப்புகளிலும் அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.    

வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 11,799 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு,கண்காணிக்கப்படுகிறது. அதேபோல வாக்கு எண்ணும் மையங்களின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதி கண்காணிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 109 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,417 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,1,239 காவல் ஆய்வாளர்கள்,4,617 உதவி ஆய்வாளர்கள்,18,744 உள்ளூர் போலீஸார், 5,805 ஆயுதப்படைக் காவலர்கள்,3,143 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள்,6,748 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 40,910 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு 60 ஆயிரம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

பரிசோதனை:

 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதோடு மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் அவர்கள் சோதனை செய்யப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி, அசம்பாவித சம்பங்களை தவிர்க்கும் வகையில் போலீஸாரை செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com