தூத்துக்குடியில் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் மனு அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிக்க யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.