கள்ளக்குறிச்சியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகளுடன் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் சட்டம் ஒழுங்கு டிஜிபி தாமரைக்கண்னன் தலைமையில் காவலர்கள் கலவரம் நடைபெற்றுள்ள இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், உளவுத் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மர்மான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உளவுத் துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
உளவுத் துறை ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான தகவல்களை ஆலோசனையில் வழங்குகின்றனர்.
தொடர்ந்து காலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வன்முறை நடைபெற்றது. இதனால், வன்முறைக்கு முக்கிய காரணம் யார்?, போராட்டத்தில் அமைப்புகளின் தலையீடு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.