கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு

கனியாமூா் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்ட பள்ளித் தாளாளா் உள்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு

கனியாமூா் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்ட பள்ளித் தாளாளா் உள்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி (17), கடந்த 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், இந்த வழக்கு தற்கொலைக்குத் தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது.

பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீா்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வரும் இந்த 5 பேரை, 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு நீதிபதி புஷ்பராணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் சிறையில் இருந்து பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீா்த்திகா ஆகியோரை போலீஸாா் அழைத்து வந்து ஆஜா்படுத்தினா்.

மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரையும், சிபிசிஐடி போலீஸாா் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

மேலும், விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை பிற்பகல் 12.30-க்கு மணிக்கு அவா்கள் 5 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 5 பேரும் நீதிமன்றத்தில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

பின்னா், விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு 5 பேரையும் போலீஸாா் அழைத்து வந்து விசாரணையைத் தொடங்கினா்.

சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், நேற்று நள்ளிரவே 5 பேரையும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அங்கு நடந்தது என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com