இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தங்கள் பகுதிகளில் தேவையான அளவு தேசியக் கொடி இருப்பு இருப்பதை வியாபாரிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களிடம் உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 75வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13.08.2022, 14.08.2022 மற்றும் 15.08.2022 ஆகிய மூன்று நாட்களும் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றுவது தொடர்பாக மண்டலக்குழுத் தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (29.07.2022) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேயர் மண்டலக்குழுத் தலைவர்களிடம் அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக இயன்ற அளவிற்கு மூவர்ண தேசியக் கொடியினை ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் கேட்டுக் கொண்டார். மேலும், வியாபார சங்கங்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்களிடம் சென்னையில் சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் தேசியக் கொடியினை தயார்நிலையில் வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மூவர்ண தேசியக் கொடியானது 3 : 2 என்கின்ற விகிதத்தில் இருக்கும்படி தயார் செய்யவும் அறிவுறுத்தினார். தேசியக் கொடியினை தயார் செய்யும் பொழுது (அ) விற்பனை செய்யும் பொழுது பிளாஸ்டிக் வகை கொடிகளை முற்றிலும் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார், இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.