திருமலை ஏழுமலையானை வழிபட பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு பக்தா்களை அனுப்பி வருகிறது. திருமலைக்கு செல்லும் அவா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள காத்திருப்பு அறைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதாம். 4 கி.மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று, சுமார் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், விஐபி தரிசனம் மற்றும் வாராந்திர சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.