சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக் கிரீடமும், வீரவாளும் வழங்கப்பட்டது.
சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கிடையே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மேடையிலிருந்து இறங்கி, கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
பிறகு, மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்தார்.
கடுமையான எதிர்பார்ப்புகளுடன் இன்று முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சலசலப்பு, கோஷங்கள், எதிர் கோஷங்கள், நிராகரிப்பு, ஆதரவு என சுமார் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது.