ஒசூர்: ஒசூர் மாநகராட்சி மேயராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஒசூர் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த பிப்.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 21 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிமுக சார்பில் 16 பேரும் பாஜக, பாமக, காங்கிரஸ் தலா ஒருவர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். சுயேட்சைகள் 5 பேர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்தார். சுயேட்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருடன் சேர்த்து 28 பேர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக சார்பில் 16 பேரும் பாஜக சார்பில் ஒருவரும் என 17 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை மேயர் தேர்தல் நடைபெற்றது
இந்த தேர்தலில் மேயராக திமுக சார்பில் எஸ். ஏ.சத்யாவும், அதிமுக சார்பில் எஸ் நாராயணன் போட்டியிட எஸ்ஏ சத்யா 27 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ். நாராயணன் 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்..