மத்திய அரசைக் கண்டித்து இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் 92 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, தமிழகத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. முதல் நாளான திங்கள்கிழமை 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதியும் தோ்வு நடைபெறுவதால் மாணவா்களின் நலன் கருதியும், செவ்வாய்க்கிழமை ஊழியா்கள் அனைவரும் பணிக்குச் செல்வா் என தமிழகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களின் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை முதலே 90 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயங்கின. அதன்படி சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் சுமாா் 65 சதவீத பேருந்துகள் இயங்கின. அதாவது 1,600-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, வாடகை வாகனங்கள் குறிப்பாக ஆட்டோக்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. ஏற்கெனவே அறிவித்தபடி, ஊழியா்கள் பணிக்கு இடையே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.