இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தனது பேச்சைத்தொடங்கிய அற்புதம்மாள், இறுதியாக மகனின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி கூறி முடித்தார்.
பேரறிவாளன் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தங்களது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அற்புதம்மாள்.
இதையும் படிக்க.. 'அவ்விய நெஞ்சத்தான்..' திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்
அற்புதம்மாள் பேசுகையில், உங்கள் அனைவரையும் நீண்ட நாள்களாக புறக்கணித்ததற்காக முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குக் காரணம் என்ன பேசுவது என்று தெரியாத தடுமாற்றம் தான்.
இன்று நன்றி சொல்லிக் கொள்ளவே உங்களை சந்திக்கிறேன். நான் மேற்கொண்ட 31 ஆண்டுகால போராட்டம் உங்களுக்குத் தெரியும். அனைத்தும் வெளிப்படையாகவே நடந்துள்ளது. பேரறிவாளனைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தீர்கள்.
ஒரு மகனின் இளமைக்காலம் முழுவதும் சிறைக்குள் கழிந்தது குறித்து அமர்ந்து யோசித்தால், அந்த மகனின் வேதனை என்னவென்று தெரியும். அதனை என் மகன் கடந்து வந்துவிட்டான்.
இந்த அரசு எனக்கு ஆதரவு அளித்தது. அதற்கான தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்துத் தலைவர்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ உள்ளங்கள் என் மகன் விடுதலைக்கு ஆதரவு கொடுத்தார்கள். குரல் கொடுத்துள்ளனர். எனக்கு நிறைய பேர் முகம் தெரியாதவர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.