மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 111.10 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை வினாடிக்கு 9,546 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,072 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்.
இதனால் நேற்று முன்தினம் காலை 108.98 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 111.10 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.28 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.98 டி.எம்.சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலை நீடித்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பு ஆண்டின் குறித்த நாளான ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு