தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஊரகப்பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தி மேம்படுத்திடவும், மண் அரிப்பை தடுப்பதற்காக ரூ.683 கோடி கோடி மதிப்பில் 10 ஆயிரம் தடுப்பணைகள் மற்றும் 5 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரகப்பகுதிகளில் விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்கலில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்றடைவதற்காக ரூ.1,346 கோடி மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும்.
ஊரகப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்வதற்காக 350 கி.மீ தொலைவிற்கு வடிகால் வசதி, 25 ஆயிரம் சமுதாய உறிஞ்சி குழாய்கள் அமைக்கப்படும்.
அதேபோன்று, ஊரகப்பகுதிகளை பசுமையாக்கவும், சூழலை பாதுகாக்கவும் ரூ,293 கோடி மதிப்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.59 கோடி மதிப்பில் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.92 கோடி மதிப்பில் மகளிர் பங்களிப்பை உயர்த்தவும், சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் முருங்கை மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஊட்டச்சத்து திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்: முதல்வர் தொடங்கிவைப்பு