தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புதன்கிழமை மாலை ராகுல் காந்தி தொடங்கும் பயணத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு புதன்கிழமை வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு ஆகியோரும் வருகை தந்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். திமுக சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டிருந்த தொண்டர்களை நடந்தே சென்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது தொண்டர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் வருகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.