நாட்டு மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு வருவது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. 3 கடலும் சங்கமிக்கும் இடத்தில் இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான தருணம்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
தேசியக் கொடி வெறும் துணி மட்டுமல்ல. தேசியக் கொடி அதைவிட மேலானது. தேசியக் கொடி நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. இந்திய மக்களின் போராட்டத்தால் மீட்டெடுக்கப்பட்டதுதான் தேசியக் கொடி.
இந்தியா மொழிகளை தேசியக் கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கொடி தனி நபருக்கானது அல்ல. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
ஒரு மாநிலத்திற்கோ, மதத்திற்கோ, மொழிக்கோ, சாதிக்கோ, சொந்தமானதல்ல தேசியக் கொடி. நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமானது. ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாகவும் தேசியக் கொடி உள்ளது.
ஒவ்வொரு குடிமக்களுக்கான உரிமையையும் தேசியக் கொடி பாதுகாக்கிறது. தனிநபர்களின் உரிமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்கிறது.
தற்போது அந்த கொடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியா என்கிற தத்துவம் கொடியை பாதுகாக்க வேண்டும். இந்தியா ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.
அவர்கள் இந்தியர்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டார்கள்.
பாஜக மொழியின் மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்தலாம் என நினைக்கிறது. தொலைக்காட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அதில் பிரதமர் முகத்தை மட்டும் தான் ஒளிபரப்புவார்கள் என்று குறிப்பிட்டார்.