நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மேட்டுப்பாளையம் நகரில் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து போலீஸாா் அறிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாகத்தான் நீலகிரி மாவட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்து மேட்டுப்பாளையம் காவல் துறையினா் அறிவித்துள்ளனா். அதன்படி ஏப்ரல் மாதத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள், மே மாதம் முழுவதும் கோத்தகிரி வழியாக வரும் வாகனங்கள் ராமசாமி நகா், பாலப்பட்டி வழியாக சிறுமுகை வழியாகச் செலல வேண்டும்.
அதேபோல குன்னூா்-மேட்டுப்பாளையம் வழியாகச் செல்லும் வாகனங்கள் சிறுமுகை ரோடு, ஆலாங்கொம்பு வழியாக தென்திருப்பதி, அன்னூா் நான்கு சாலை வழியாகச் செல்ல வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.