
ஊழல் செய்வது, கடன் வாங்குவது, பொய் சொல்வதில் தான் திமுக ஆட்சி முதலிடத்தில் இருக்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
காலை 9 மணிக்கு திருமயம் கோட்டையில் தொடங்கிய நடைபயணம், தகரக் கொட்டகை, பாப்பாவயல், பழைய நீதிமன்றம் வழியாக திருமயம் பேருந்து நிலையத்தை அடைந்தது.
இங்கு அவர் பேசியதாவது:
திருமயம் தொகுதியிலிருந்து அமைச்சராகியிருப்பவர் ரகுபதி. அவருக்கு ஊழல் தடுப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர் அவர். இதைத்தான் திராவிட மாடல் என்கிறார்கள்.
அதிகமாக கடன் வாங்குவதும், பொய் சொல்வதும், ஊழல் செய்வதிலும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
இம்மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. மீண்டும் மோடிதான் பிரதமராகப் போகிறார். அப்போது இங்கிருந்து பாஜக எம்பி செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த யாத்திரை என்றார் அண்ணாமலை.
தொடர்ந்து லெணாவிலக்கு பகுதியிலுள்ள சிற்பக்கூடத்தையும் அண்ணாமலை பார்வையிட்டார். அவருடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.