விழுப்புரம்: அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்படவுள்ளன. இதில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி ரயில் நிலையங்களும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து, புது தில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மறுசீரமைப்புப் பணிகளை அடிக்கல் நாட்டினார். ரூ.23.50 கோடியில் பல்வேறு பணிகள் அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் ரயில் நிலைய முதல் நடைமேடையில் நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள், விழுப்புரம் தெற்கு விஏடி. கலிவரதன், வடக்கு ராஜேந்திரன் மற்றும் ரயில்வே அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.