அவிநாசி அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 9ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை பலியானார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரைச் சேர்ந்த முருகன் கிருஷ்ணவேணி தம்பதியின் மகள் கந்தேஸ்வரி. இவர் அவிநாசி நாதம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது சகோதர் கபில்தேவ்நாத் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, காலை பள்ளியில் நடைபெற்ற இறை வழிபாட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை அவிநாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பிறகு மேல் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் கந்தேஸ்வரி உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி பலியானார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.