மதுரை: மதுரையில் பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் மு. க. ஸ்டாலின், அவருக்கு கருணாநிதி திருவுருச்சிலையை வழங்கி பாராட்டினார்.
மதுரையில் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு பெரிய அளவில் கொடை அளித்து வரும் தத்தனேரியை சேர்ந்த வத்தல் வியாபாரி ராஜேந்திரன்.
இவர், மதுரை திரு.வி.க மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் கட்டுமான மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.1 கோடியும், கைலாசபுரம் தொடக்கப் பள்ளியில் 4 வகுப்பறைகள், உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறு போடும் பணிகளுக்கு ரூ. 75 லட்சத்து 45 ஆயிரம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் வியாழக்கிழமை காலை ராஜேந்திரனை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சமூக நலப் பணிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவச் சிலையை நினைவு பரிசாக வழங்கி பாராட்டினார்.