சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன், குழந்தைகளை காப்பாற்றக் கோரி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் கைது செய்யப்படுவதற்குள் ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சில ஆவணங்களை கனகராஜின் அண்ணன் தனபாலன் அழித்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த தனபால், கடந்த வாரம் நில மோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சில நாள்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு இரண்டாவது முறையாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேற்று அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு முன்னதாக, “எனது இரண்டு மகள்களையும் முதல்வர்தான் காப்பாற்ற வேண்டும் என்றும், மேச்சேரி காவல்ஆய்வாளர் வில்லிங் லெட்டர் கொடுக்கவில்லை” எனக் கூறி கதறி அழுதார்.
மகள்களை காப்பாற்றக் கோரி தனபாலன் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.