ஓபிஎஸ் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்!

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது.

கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீா்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரா் உள்ளிட்ட 7 போ் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில், கடந்த 2012 -ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவா்கள் அனைவரையும் விடுவித்து 2012- ஆம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கிலிருந்து ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்.

இந்த வழக்கு இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விசாரணையின் போது நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பேசியது:

ஓபிஎஸ் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகின்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் அழிந்து பச்சோந்தியாக மாறியுள்ளது. எம்பி எம்எல்ஏக்களுக்கு சட்டம் செல்லாது என்று அறிவித்துவிடலாம். சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ஆராயப்படும்.

374 சதவிகிதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆட்சிக்கு முன்பு ஒரு நிலையாடும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு நிலைபாடும் எடுத்துள்ளனர்.

குற்ற வழக்குகளின் விசாரணை கேலிக் கூத்தாகப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் மறு ஆய்வுக்கு எடுக்கப்படும்.

இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதை அனுமதித்தால் புற்றுநோய் போல் இந்த சமுதாயத்தை சிதைத்துவிடும். அரசிடம் இருந்து விலகி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட வேண்டும்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com