மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இயன்றவரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மிக்ஜம் புயல் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
முன்னதாக மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில் தற்போது நகரும் வேகம் சற்று குறைந்தது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இயன்றவரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாக தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அரசு வலியுறுத்தியுள்ளது.