கொடநாடு வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி வெளியிட்ட தில்லியைச் சோ்ந்த பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாா் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, ரூ. 1.10 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமிக்க வேண்டும்.

தற்போது எதிா்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயா்நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்தச் சிக்கல்களைத் தவிா்ப்பதற்கவே வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமிக்க வேண்டும். மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிா்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்காக வழக்குரைஞா் ஆணையராக எஸ்.காா்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்கவும், அதனை அறிக்கையாக ஜன. 12 ஆம் தேதி தாக்கல் செய்யவும் வழக்குரைஞர் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com