மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழுவினர், விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர்.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, மத்தியக் குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.
தொடர்ந்து, நாளை மறுநாள்(டிச. 14) மத்தியக் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தபின்னர் தில்லி திரும்புகிறது.
இந்தக் குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே. சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித்துறை அதிகாரி ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சோ்ந்த விஜயகுமாா், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி திமன்சிங், உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.
இதையும் படிக்க | அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 3 நாள் போலீஸ் காவல்!