தாமிரவருணியில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலைமுதலே தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
''தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமிரவருணியில் 45,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பு அளவு 60,000 அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பிவருவதால், அணைகளை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து 2 டேங்கர் ஆவின் பால், பால் பவுடர் கொண்டுவரப்படுகிறது. 4 மாவட்டங்களுக்கும் 10 நாள்களுக்குத் தேவையான பால் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் குறிப்பிட்டார்.