நெல்லையில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், நடந்தேறிய வளைகாப்பு விழா விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விழா நடைபெறும் மண்டபத்தில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையிலும், உறவினர்களுடன் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளநீரில் நின்றவாறு தம்பதிகள் போட்டோஷூட் செய்யும் விடியோ வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு திருவிழா நேற்று (டிச. 17) இரவு நடைபெற்றது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ரோஸ் மஹால் என்னும் மண்டபத்தின் அருகே உள்ள பிள்ளையை போட்டு பலாபழம் எடுத்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த தண்ணீர் மண்டபத்துக்கு உள்ளே புகுந்ததால் விழாவிற்கு வந்திருந்தவர்கள் நாற்காலிகள் மீதும், மாடியில் நின்றும் விழாவினை கண்டு ரசித்தனர்.
இதிலும், குறிப்பாக தங்கள் கடமை உணர்வை தெரியப்படுத்தும்வண்ணம் போட்டோ - விடியோ கலைஞர்கள் மணமகன் மணமகளை தண்ணீரில் நிற்க வைத்து போட்டோ, விடியோ எடுக்கின்றனர். இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் முன்பு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் மெஹந்தி போடுவதற்காக சென்ற பெண்ணின் விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
சென்னை வெள்ளத்தில் மெஹந்திதான் போடச் சென்றார்கள், ஆனால், நெல்லை வெள்ளத்தில் வளைகாப்பு விழாவே நடக்கிறது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.