சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
துணை வேந்தராக பணியாற்றும்போது வணிக நிறுவனத்தைத் தொடங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழகத்தில் பதிவாளர் முதல் கீழ்நிலை ஊழியர் வரை பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படை தன்மை என்பது இல்லாமல் இருந்த சூழ்நிலையை அவ்வப்போது பல்கலைக்கழக ஊழியர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர்.
சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்போது, பல்வேறு பகுதிகளிலுள்ள நபர்களை இணைத்து வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தனியார் கல்லூரிகளைத் தொடங்கிக்கொள்வதற்கான அனுமதி வழங்கும் அறக்கட்டளையாக இந்த நிறுவனம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தை பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டு செயல்பட வைத்து, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதும், கல்வி வளர்ச்சிக்காக ஆக்க பூர்வமாக எதையும் செய்யாத நிலையில், தன்னுடைய சொந்த நிறுவனத்தை லாபம் பெற செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பல்கலைக் கழக தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் துணை வேந்தரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை விவரங்களை காவல் துறையினர் இதுவரை வெளியிடவில்லை எனக்கூறப்படுகிறது.