திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை கிலோவுக்கு ரூ 20 குறைந்துள்ளது.
திருப்பூரில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.
தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வந்தது.
இதையும் படிக்க | வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மூத்த புகைப்படக்காரர் உயிரிழப்பு
இந்நிலையில், கடந்த ஆண்டு நூல் விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ. 480 வரை உயர்ந்தது. இதனால் புதிய ஆர்டர்கள் எடுக்காமல் ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டியதால் தற்போது நூல் நுகர்வு குறைந்து விலை சரிவை சந்தித்து வருகிறது.
நடப்பு மாதத்தில் நூலின் விலை அனைத்து ராகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. புது ஆண்டில் நூல் விலை குறைந்துள்ளது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ 20-ஆம் எண் கோல்டு நூல் ரூ.253-க்கும், 24-ஆம் எண் ரூ.265-க்கும், 30-ஆம் எண் ரூ.275-க்கும், 34-ஆம் எண் ரூ.295-க்கும், 40-ஆம் எண் ரூ.315-க்கும், 20-ஆம் எண் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ஆம் எண் ரூ. 255-க்கும், 30-ஆம் எண் ரூ.265-க்கும், 34-ஆம் எண் ரூ. 285-க்கும், 40-ஆம் எண் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.