ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது: பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து!
ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
வள்ளியூர் மற்றும் பணகுடி வட்டார பகுதிகளில் 155 சுய உதவிக் குழுக்களில் 1886 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கடன் தள்ளுபடி சான்றிதழை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கினார்.
அப்போது, தமிழ்நாட்டை தமிழகம் என கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பேசுவதை அவர் தவிர்ப்பது நல்லது என கூறினார்.
மேலும், ஆளுநர் இந்திய அரசமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதன்படி பேச வேண்டும் என்பது என் கருத்து. பல சந்தர்ப்பங்களில் அவர், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான காரியங்களை பேசி விடுகிறார்.
உதாரணமாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஆனால், ஆளுநர் ஏற்கெனவே ஒருமுறை மதச்சார்புள்ள நாடு என்று பொதுவெளியில் பேசினார். இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பான வார்த்தைகள் பேசுவதை ஆளுநர் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அப்பாவு கூறினார்.