அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் 39 ஆவது பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் புதன்கிழமை 39 திருமண ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சியை, விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் முரளி நடத்தினார்.
இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் முரளியை அதிமுகவில் இருந்து நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.முரளி(எ)ரகுராமன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.