பள்ளி புத்தகங்களுக்கு பதிலாக கையடக்க கணினி: அப்பாவு தகவல்

பள்ளிப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
அவைத் தலைவர் அப்பாவு
அவைத் தலைவர் அப்பாவு


சென்னை: பள்ளிப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

அதாவது, பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என நெல்லையில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா, விலையில்லா மிதிவண்டி வழங்கும் தொடக்க விழா ஆகியவை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாப் பேரூரையாற்றிப் பேசுகையில், 1921- ல் பெண்களுக்கு வாக்குரிமையை பெற்றுத்தந்தது நீதிக்கட்சிதான். இதன் நீட்சியாக திராவிட இயக்கங்களால்தான் கல்வி வளர்ச்சி அடைந்தது. இதன் பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்து மதிய உணவுத் திட்டத்தை தந்து குழந்தைகளை பள்ளிக்கு வரவைத்தார், மேலும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களை திறந்தார். 

கருணாநிதி, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பல திட்டங்களை தந்தார், இதனால்தான் இந்திய அளவில் பட்டம் படித்த பெண்களின் சதவீதம் 26 ஆக உள்ளது , தமிழகத்தில் பட்டம் படித்த பெண்களின் எண்ணிக்கை 72 சதவீதமாக உள்ளது . எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்றம் காகிதமில்லா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய திட்டமாக  பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லாத பள்ளிகள் உருவாக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் அறிவித்து தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து அப்பாவு, மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினர். பின்னர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 33 அரசு பள்ளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழும், சிறப்பாக செயல்பட்ட 5 பள்ளிகளுக்கு காமராஜர் விருதும் வழங்கப்பட்டது . முன்னதாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்த விழாவில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com