கொடநாடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு என நடைபெற்று வந்த நிலையில் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, மேற்கு வங்கத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர் இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இன்று நடைபெறும் விசாரணையில் இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் குடும்ப நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 8ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி காவல் துறையினரின் மற்றொரு குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருவதால், விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி காவல் துறையினர் தலைமையில் கூடுதல் கால அகவாசம் கேட்கப்பட்டதால் வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், தற்போது வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. எலக்ட்ரானிக் உரையாடல்கள் குறித்து குஜராத் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அறிக்கைகள் பெறவேண்டிய நிலை இருப்பதாலும், புலன் விசாரணை தொடர்பாக 19 செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என்பதை நீதிபதி ஸ்ரீதர் இடம் எடுத்துக் கூறினார்.
இதனை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.