சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், உயர்ந்து வரும் தக்காளி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க.. இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 300 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில், நாளை முதல் குறைந்தது 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மீது இந்த சுமை செல்லக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அறிவித்தார் அமைச்சர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பெரிய மாவட்டங்களில் 15 நியாயவிலைக் கடைகளலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விளைச்சல் குறைந்ததன் காரணமாக இயற்கையாக ஏற்பட்ட விலை ஏற்றம்தானே தவிர, செயற்கையாக நடந்தது அல்ல என்றும் அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.