நாகர்கோவில்: குழந்தை திருமணத்துக்கு ஆதரவாகப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகின்றது. இதேபோல் அனைத்துக் கட்சிகளும் பெண்ணுரிமையை மீட்க முயற்சிக்க வேண்டும்.
மத்திய அரசு அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்தை படிப்படியாக மாற்றி மனு நீதி அடிப்படையிலான சட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றம் போன்ற பல நீதிமன்றங்களும் மனு நீதிக்கு ஆதரவாக செயல்படுவது சரியல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அவரை கைது செய்த முறைதான் தவறு என்று கூறுகிறோம்
தமிழக ஆளுநர் ரவி தனது சட்ட வரம்பை மீறி செயல்பட்டு வருகிறார்.
அவர் தமிழகத்தில் பாஜகவின் அஜெண்டாவை செயல்படுத்த வந்தவர் போல் தெரிகிறது. சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்த தீட்சிதர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தால் ஆளுநர் தீட்சிதர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். மேலும் தானே குழந்தை திருமணம் செய்தவர்தான் என்று குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுகிறார் இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
தமிழகத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.