அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் மேலும் 20 நாள்கள் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல்நிலை சீராக உள்ளதால், வென்டிலேட்டா் கருவி அகற்றப்பட்டது. இந்தநிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்தில் இருந்து 4-ஆவது தளத்தில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் மேலும் 20 நாள்கள் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 30 வரை மழை தொடரும்!
மேலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது.