திருச்சி: பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சியில் பல்வேறு மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது,திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, மாவட்டச் செயலாளர் அஸ்ரப் அலி, மாவட்ட
பொருளாளர் காஜாமியான், மாநில அமைப்புச் செயலாளர் மிட்டாய்காதர், மாநிலச் செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் அலி பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார். இந்த சிறப்புத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், செயலாளர் ஜாகீர், பொருளாளர் லால் பாஷா, துணைத் தலைவர் காஜா, துணைச் செயலாளர் உமர், பிலால், கனி, ரசூல் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்
இதுபோல, திருச்சி மாநகரில் அரியமங்கலம் காமராஜ் நகர், பீமநகர், கே.கே.நகர், தில்லைநகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தொழுகைக்குப் பின்னர் பலியிடப்பட்ட ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியை மூன்றாகப் பகிர்ந்து, அதில் ஒரு பகுதியை தங்களுக்கும், ஒரு பகுதியை தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எஞ்சிய ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக வழங்கி தியாகத் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடினர்.