புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தொழிலாளா்கள் அச்சத்தில் இருப்பதால் அவா்கள் சொந்த ஊா் திரும்பத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆள் பற்றாக்குறையால் தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறையைச் சோ்ந்த தொழில்முனைவோா் அரசுக்கு கவலை தெரிவித்திருக்கின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பாக விசாரிக்க தனிப் படையினா் பிகாா் விரைந்திருக்கின்றனா். இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.