புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு இன்று சனிக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு இன்று சனிக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.  சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து, 141.81 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், இரு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.  எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென,  புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பிப்ரவரி 23-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி / மொத்தம் 69.12 மில்லியன் கனஅடி) ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று  மார்ச் 11 சனிக்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கன அடி (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி / 11 நாட்களுக்கு மொத்தம் 47.52 மில்லியன் கன அடி) தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் திறந்து வைத்தார். 

இவ்விழாவில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன்,  வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் குறிச்சி பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் புழுதிக்குட்டை அறிவழகன்,  குறிச்சி கலா பெரியசாமி மற்றும் திமுக பிரமுகர்கள் குறிச்சி  சடையன்,கனகராஜ் பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com