பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 93.93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.93 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில், 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவியர் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
இதன் முடிவுகள் இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவியரில், 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவியர் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும்.
இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவியர்களில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 18 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.