ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒரே நேரத்தில் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்கள், கட்டுமான நிறுவனத்தில் சோதனை ஏன்?

ஒரே நேரத்தில் அமைச்சர் எ.வ. வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களிலும், பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image
ஒரே நேரத்தில் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்கள், கட்டுமான நிறுவனத்தில் சோதனை ஏன்?
Updated On :3 நவம்பர் 2023, 12:28 pm

DIN

சென்னை: ஒரே நேரத்தில் அமைச்சர் எ.வ. வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களிலும், பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு, சோதனையின் முடிவில்தான் பதில் தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய 90 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் வரி ஏய்ப்புப் புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு. கடந்த 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு எ.வ. வேலு உணவுத்துறை அமைச்சராகவும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும்  கட்டுமான நிறுவனங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அமைச்சர் எ.வ. வேலு சென்னை அபிராமிபுரம் சீனிவாசா தெருவில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகள் யாரும் சோதனைக்கு செல்லவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள அவரது வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

அதேபோல பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள்,வீடுகளிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் நடத்திய சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அதேபோல் சில கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை திநகர், வேப்பேரி, அண்ணாநகர் ஆகிய பகுதியில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் இதற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல் திநகர் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுக்கும் இந்த நட்சத்திர விடுதி கட்டுமான நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து சோதனை முடிவில் தான் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ஏ.வ. வேலு மீது கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக எ.வ.வேலும் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.