களக்காடு: களக்காடு அருகே முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்தவர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் மேல்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கனகராஜ் (35). இவரது தம்பி முத்துக்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணபெருமாள் மகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
முத்துக்குமார் கோயம்புத்தூரில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், தனது தம்பி முத்துக்குமார் மனைவிக்கு, அவரது தந்தை நாராயணபெருமாள் திருமணத்தின் போது பேசிய நகையை வரதட்சணையாக கொடுக்கவில்லையாம்.
இது தொடர்பாக நாராயணபெருமாளிடம் கனகராஜ் அடிக்கடி கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாராயணபெருமாளிடம் நகை பாக்கி குறித்து கனகராஜ் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நாராயணபெருமாள் மண்வெட்டியால் கனகராஜை அடித்துள்ளார். இதில் கனகராஜ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசார் நாராயணபெருமாள் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.