ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பை பாராட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க. ஸ்டாலின் இன்று (21.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக் கழகம் இருக்கிறது. அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது. அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்ததைதான் பேசுகிறேன்.
இப்படி முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்; வளரும்! மற்றவர்கள் கையில் இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துத்தான், 2013-ஆம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார்கள்.
இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம்! இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.