சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை எழும்பூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் கலந்து கொண்டாா். தொடா்ந்து கையெழுத்து இயக்கம் மற்றும் மரம் நடுதல் இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் 360 ரெயில் நிலையங்களில் 12 ஆயிரம் தன்னாா்வலா்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க | பராமரிப்புப் பணி: புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து
தாங்கள் இருக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது.
வைகை, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது குறித்து கலந்தாலோசித்து பயணிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் (எம்ஆர்டிஎஸ்) சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாடு அரசு தற்போது தணிக்கை திட்ட அறிக்கையை தயாரித்து வருகின்றது.
தமிழ்நாடு அரசு எப்போது வேண்டும் என்று கேட்கிறதோ அப்போது பறக்கும் ரயில் வழித்தடம் முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.