காவிரி: டெல்டா மாவட்டங்களில் அக்.11-ல் முழு அடைப்புப் போராட்டம்

காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.
கூட்டத்தில் பேசிய ஏ.கே.எஸ். விஜயன்
கூட்டத்தில் பேசிய ஏ.கே.எஸ். விஜயன்

தஞ்சாவூர்: காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த திமுக விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்புத் திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.  

எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்றது.

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்புப் போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும் எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியை தொடங்கிட, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும்,

தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் பாஜக  அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார் விஜயன்.

அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மாநில பொதுச் செயலர்கள் பி.எஸ். மாசிலாமணி, சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா. பெரியசாமி, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர்வாகிகள் காளியப்பன், சு. பழனிராஜன், என்.வி. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com