கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் இன்றும் (புதன்கிழமை) போராட்டம் நடத்த உள்ளனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் ஓலா, ஊபர் டாக்சிகளின் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஓலா, ஊபர் போன்ற செயலிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஓட்டுநர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். மேலும் மதுரை, திருச்சி, கோவையிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாக ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சென்னையில் 20 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
இந்தப் போராட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஓலா, ஊபர் செயலிகளில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான ஓட்டுநர்களே வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கி.மீ. தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது. ஓட்டுநர்கள் பற்றாக்குறையின் காரணமாக இன்று அதே தூரத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1400 வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தக் கட்டணம் மேலும் உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.