வங்கக் கடலில் புயல் சின்னம்: வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து திங்கள்கிழமை (அக். 23) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்
வானிலை மையம்
வானிலை மையம்
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து திங்கள்கிழமை (அக். 23) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வெள்ளிக்கிழமை உருவாகியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை (அக். 23) வலுப்பெறக்கூடும்.

மேலும், குமரிக் கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும். வடகிழக்குப் பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சனி முதல் வியாழன் வரை (அக். 21-26) ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மத்திய வங்கக் கடல், அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 21) சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல்

தென்கிழக்கு, அதையொட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலுக்குள் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 22) தீவிர புயலாக மாறக்கூடும். தொடா்ந்து, வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (அக். 24) தெற்கு ஓமன் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com