கிண்டி அருகே தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வளாகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சென்னை பெருநகர தெற்கு மாவட்ட கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர தெற்கு மாவட்ட கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் அளித்த விளக்கத்தில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வளாகம் முன்பு பிரதான சாலையில் மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து கையில் வைத்து இருந்த 4 பெட்ரோல் குண்டுகளில் ஒரு பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்ப முயன்றார். அவரை அங்கு உள்ள காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர்.
அருகில் உள்ள கிண்டி காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வினோத் (எ) கற்கா வினோத் என்பவர் ஏற்கனவே இது போன்று 4 இடங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்து தற்போது வெளியே வந்துள்ளதும், அண்மையில், சென்னை திநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
என்ன காரணத்தினால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார் என்பது, காவல்துறை விசாரணைக்கு பிறகே தெரிய வரும். அதன்பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க உள்ளனர் என தெரிவித்தார்.