புதுக்கோட்டை: ஆளுநர் தான் எதிர்க்கட்சித் தலைவரைப் போல ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்கிறார்; அதற்குத்தான் நாங்கள் பதில் அளிக்கிறோம் என்றார் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை முற்பகலில் அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் மாளிகைக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் போகிற யாரோ ஒருவர் எதையோ வீசிவிட்டுச் செல்கிறார் என்றால் அதற்கு உளவுத்துறையோ, யாரோ எப்படி பொறுப்பேற்க முடியும்.
அதேநேரத்தில், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிரியையும் பாதுகாக்க வேண்டும் என்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என போகிற போக்கில் சொல்லக் கூடாது.
எங்களுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே யாரோ செய்த சதிச்செயல்தான் இது.
திமுக கூட்டணிக் கட்சியினர் ஆளுநர் மீது வாய்மொழித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.
அவர் தான் எதிர்க்கட்சித் தலைவரைப் போல ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். நாங்களும் பொருத்துதான் போனோம்.
ஆனால் தவறான தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டியது எங்களின் கடமை. அதன்படி நாங்கள் அவருக்கு பதில் தான் கொடுத்து வருகிறோம். யாரையும் அசிங்கப்படுத்த வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார் ரகுபதி.